சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படவில்லை.. கடம்பூர் ராஜூ..!

By vinoth kumarFirst Published Jun 7, 2021, 6:24 PM IST
Highlights

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு சாதகமாக செயல்படவில்லை. சசிகலா விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து எடுப்பார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு சாதகமாக செயல்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா திடீரென மார்ச் 3-ம் தேதி தீவிரஅரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். இதனையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதால் சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற அரசியலில் களமிறங்குவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. 

இதனிடையே, அதிமுக தேர்தல் தோல்விக்குப் பின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதிமுகவுக்குள் தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்கிற செய்தி வெளியாகும் நிலையில், சசிகலா திடீர் திடீர் எனத் தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார். அதில், சசிகலா தொண்டர்களிடம் பேசும்போது நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்துவிடலாம் என்று பேசிவருவதால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அதிமுகவுக்கு சாதகமாக செயல்படவில்லை. சசிகலா விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து எடுப்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்களிலேயே அரசை விமர்சிப்பது எதிர்கட்சிக்கு சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

click me!