
சசிகலாவும், டிடிவி.தினகரனும் என்னை முதல்வராக்கவில்லை...சட்ட மன்ற உறுப்பினர்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆக்கினர். கட்சியில் நான் படிப்படியாக வளர்ந்துதான் முதல்வரானேன்... என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.
சிவகங்கைக்கு எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் பங்கேற்கச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். சசிகலா குடும்பம் செய்த தவறுகளே வருமான வரித்துறை சோதனைக்கு காரணம்; ஆளுநர் ஆய்வு நடத்துகிறார் எனக் கூறுவது தவறு, நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறார்.
வரி ஏய்ப்பவர்கள் மீது சோதனை நடத்துவது வழக்கம். ஜெயலலிதா அறையில் எந்த சோதனையும் நடைபெறவில்லை... என்று நேற்றைய போயஸ் கார்டன் இல்ல சோதனைகளுக்கு தன் தரப்பு விளக்கத்தை அளித்தார்.
மேலும், வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது வருமான வரி சோதனை நடக்கும். இதில் மாநில அரசின் தலையீடு இல்லை. தினகரன் கட்சிக்காக என்ன தியாகம் செய்தார். பத்து ஆண்டுகள் கட்சியில் இல்லாத தினகரன் எங்களை எப்படி நிர்வகிக்க முடியும். தினகரன் என்னை முதல்வராக்கவில்லை. தன்னைத்தானே ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவித்து கொண்டார். நான் படிப்படியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். கட்சிக்கும்ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால் இந்த பொறுப்புக்கு வந்துள்ளேன். சசிகலா என்னை முதல்வராக்கவில்லை. ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களே என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர் என்று அப்பட்டமாக அடித்துக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து, கோவையில் ஆளுநர் ஆய்வு செய்தார் என்பதே தவறு. ஆளுநரின் ஆய்வு திட்டமிடப்பட்டது இல்லை. திட்டங்களைத் தெரிந்து கொள்வதற்காகவே அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். ஆளுநர் ஆய்வு குறித்து எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றன. மாநில அரசு சிறப்பாக செயல்படுவதாக ஆளுநர் பாராட்டிப் பேசியுள்ளார்... என்று ஆளுநர் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்த அறையில் சோதனை நடத்தப்படவில்லை. கோயிலாகக் கருதும் ஜெயலலிதாவின் இல்லத்தை நாங்கள் அரசு நினைவிடமாக்க முடிவு செய்துள்ளோம். வருமான வரி சோதனையில் மாநில அரசுக்கு பங்கு இல்லை. சில பேர் செய்த தவறின் காரணமாக தொண்டர்களுக்கும் கழகத்திற்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.