பாகனை மிதித்துக் கொன்ற சமயபுரம் யானை….. ஸ்ரீ ரங்கம் ஜீயர் கருத்தால் ஆடிப் போயிருக்கும் எடப்பாடி குரூப்….

First Published May 27, 2018, 8:44 AM IST
Highlights
samayapuram elephant issue is danger for edappadi ruling


திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை, பாகனை மிதித்துக் கொன்ற சம்பவத்தால் இந்த ஆட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்படப்போவதாக ஸ்ரீரங்கம் ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் தெரிவித்துள்ள ஆருடத்தால் எடப்பாடி பழனிசாமி குரூப் ஆடிப்போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள 10 வயதுடைய மசினி என்ற பெண் யானை கோவிலில் பூஜை மற்றும் விழாக்காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும் தினமும் கோவிலில் யானை நிறுத்தி வைக்கப்பட்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.

அதன்பின் கோவில் அருகே சற்று தொலைவில் மாகாளிகுடியில் உஜ்னி அம்மன் கோவில் அருகே ஒரு இடத்தில் யானை அடைக்கப்படும். கோவில் யானைக்கு பாகனாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கஜேந்திரன் இருந்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல மாகாளிகுடியில் இருந்து யானை குளிப்பாட்டி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. மேலும் கோவிலுக்கு குருக்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கோவிலில் காலை பூஜை நடந்த போது அம்மன் சன்னதி அருகே யானை நிறுத்தப்பட்டிருந்தது. பூஜை முடிந்த பின் கோவிலில் பலகார ஸ்டால் அருகே யானை நின்றது.



அதன் அருகே பாகன் கஜேந்திரன் நின்று கொண்டிருந்தார். யானை மசினி பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தது. அப்போது யானையின் நடவடிக்கை மாறியது. இதனால் பாகன் யானையை அங்குசத்தால் தட்டி கொண்டிருந்தார்.

காலை 10.35 மணி அளவில் யானை திடீரென கோபம் கொண்டு பிளிறியது. மேலும் அருகில் இருந்த பாகன் கஜேந்திரனை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு காலால் பயங்கரமாக மிதித்தது. இதனை கண்ட பக்தர்கள் அலறி அடித்து கோவிலை விட்டு உடனே வெளியே ஓடத்தொடங்கினர். யானை பாகனை விடாமல் காலால் சுற்றி, சுற்றி மிதித்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைர் தொடர்ந்து மசினி யானைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தால் இந்த ஆட்சிக்கு பெரும் ஆபத்து ஏற்படப்போவதாக ஸ்ரீரங்கம் ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒரவர் பை ஒன்றை வீசிச் சென்றார். இதனால்தான் பெருமாளின் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு கோபம் ஏற்பட்டு இச்சம்பவம் நடந்துள்ளது என ஜீயர் குறிப்பிட்டார்.

மேலும் இதனால் தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீரங்கம் ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் சுவாமிகள் தெரிவித்தார். ஜீயரின் இந்த ஸ்டேட்மெண்ட்டால் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் வகையறாக்கள் மிரண்டு போய் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!