திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்திய சபரீசன்... நாங்கள் ஆண்டவனுக்கு, ஆன்மீகத்திற்கு எதிரி அல்ல.. RS.பாரதி.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2022, 4:47 PM IST
Highlights

நாங்கள் ஆண்டவருக்கோ, ஆன்மீகத்திற்கோ எதிரானவர்கள் அல்ல என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். முதலமைச்சரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்தியது தொடர்பாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாங்கள் ஆண்டவருக்கோ, ஆன்மீகத்திற்கோ எதிரானவர்கள் அல்ல என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார். முதலமைச்சரின் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்தியது தொடர்பாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் அரசுக்கு எதிராக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. திமுக இந்துக்களுக்கு எதிராக கட்சி என்றும், இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும்  குற்றம் சாட்டி வருகின்றன. இந்து சமய அறநிலைத்துறை என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருவதாக புகார் கூறி வருகின்றனர். இது ஒரு புறம் உள்ள நிலையில் நகைமுரணாக முதலமைச்சர் ஸ்டாலினின்  துணைவியார் பல கோயில்களுக்கு சென்று பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதுவும் ஒருபுறம் பேசு பொருளாக இருந்து வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு எதிராக இத்தனை புகார்களுக்கு மத்தியில், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் மருமகன் சபரீசன்  யாகம் நடத்தியுள்ளார். பல அரசியல் புள்ளிகள் மற்றும்  தொழிலதிபர்கள் கோயில்களில் சிறப்பு யாகம் செய்வது வழக்கம், அந்த வகையில் சபரீசன் புதன்கிழமை இரவு  திருச்செந்தூர் முருகன் கோவில் வள்ளி குகை செல்லும் நடையை மறித்து சத்ரு சம்கார லட்சார்ச்சனை யாகம்  நடத்தியுள்ளார். இதானல் அதிகாலை கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: மூவர்ணக்கொடி படத்தை நாங்களும் வைப்போம்.. நேரு டிபியை வைத்து பாஜகவை வெறுப்பேற்றிய காங்கிரஸ் !

சாமிதரிசம் செய்ய 5 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்துக்கொண்டிருந்த நிலையிலும் பக்கதர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது, இதனால் அங்கிருந்த மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் பலரும் பல வகைகளில் விமர்சித்து வருகின்றனர். திராவிடம், பெரியாரியம் என பேசும் திமுக குடும்பத்தினர் கோவில் கோவிலாக யாகம் செய்து வருகின்றனர், எதற்கு இந்த நாடகம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்?

இதையும் படியுங்கள்:  "பெரியார் சிலைகளை அடித்து உடையுங்கள்".. வெறுப்பு கக்கிய பாஜக நபர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் யாகம் நடத்துவதற்கு தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு  தெரிவித்ததுடன், திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் செய்யக்கூடாது என்று தெரியாதா? என்று ஆவேசம் காட்டினார். தற்போது அதை மேற்கோள் காட்டி சபரீசனின் பரிகார பூஜையை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் திராவிட மாடல் ஆட்சியில் எல்லோரும் சமம் என கூறி வரும் நிலையில் அதிகாரம் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் தனி ஒரு நபருக்காக கோவில் பாதையை அடைத்து பொதுமக்களை அனுமதிக்காமல் இப்படி நடந்து கொண்டது நியாயம்தானா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது இது கடுமையாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம், முதல்வர் மருமகன் சபரீசன் திருச்செந்தூர் கோவிலில் யாகம் நடத்தியுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திராவிட மாடல் என்பது வேறு, ஆன்மீகம் என்பது வேறு, அதை தவறாக  புரிந்து கொள்ளாதீர்கள். நாங்கள் ஆண்டவருக்கு விரோதி அல்ல, ஆன்மீகத்திற்கும் விரோதி அல்ல என கூறினார். மேலும் இதை விரிவாக சொல்ல வேண்டுமென்றால் பிராமின் non- பிராமின் என்று இருப்பதில் பிராமணத்தை எதிர்த்துதான் நீதிக்கட்சி வந்தது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

click me!