திருமாவளவன் செய்வதைத்தான் ருத்ரதாண்டவம் படத்தில் காட்டியிருக்காங்க.. அம்பலப்படுத்திய வேலூர் இப்ராஹீம்.!

By Asianet TamilFirst Published Oct 4, 2021, 9:26 PM IST
Highlights

ருத்ரதாண்டவம் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ளதைப் பார்க்கிறோம் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
 

சிதம்பரத்தில் வேலூர் இப்ராஹீம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்களை ஏமாற்றக் கூடிய திமுக அரசு, தொடர்ந்து பொய் வாக்குறுதிகளை கொடுத்து அனைவரையும் ஏமாற்றி மோசடி செய்து மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறது. திமுக அரசு தொடர்ந்து இந்து மக்களின் மத உணர்வுகளை இழிவுபடுத்துவதும் நம்பிக்கையை இழிவு படுத்தக்கூடிய  பிரிவினைவாத சக்திகளுக்கு ஊக்கப்படுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. கடந்த காலத்தில் தேச விரோத கருத்துகளை சட்டப்பேரவையில் பேசும்போது முதல்வர் ஸ்டாலின் மென்மையாக அனுமதித்ததை போல இன்று இந்து மத வழிபாட்டு தலங்களில் காலங்காலமாக கோயில்களுக்கு அளித்த நகைகளை இன்று உருக்கி ரிசர்வ் வங்கியில் வைத்து, வட்டி பணத்தை எடுத்து நாங்கள் செலவு செய்யப்போகிறோம் என்றும் அதை கோயில் பராமரிப்பு செலவு செய்யப்போவதாக சொல்வது அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம்.
இந்து மதத்தின் நம்பிக்கைகளான கோயில்களை இவர்களால் நடத்த முடியாவிட்டால் அதை மக்களிடம் கொடுத்துவிட வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள இந்து மக்களே ஒவ்வொரு கோயில்களையும் நடத்திக்கொள்வார்கள். கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கி விற்கக்கூடிய திட்டம் என்பது, இந்து மத நம்பிக்கையைத் தரைமட்டமாக்கும் மிகப்பெரிய சூழ்ச்சியாக நாங்கள் கருதுகிறோம். கோயில்களில் உள்ள பாரம்பரிய நகைகளை உருக்கக் கூடாது. அந்த எண்ணத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் வரும் 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய திருக்கோயில்கள் முன்னால் பாஜக சார்பில் மிகக் கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம்.
ருத்ரதாண்டவம் திரைப்படத்தை நான் பார்த்தேன். இன்று திருமாவளவன் என்ன காரியத்தை செய்கிறார்? தலித் மக்களை ஏமாற்றுகிறார். தலித் மக்களின் மத்தியில் பல்வேறு தவறான கருத்துகளைப் பரப்பி, பிற சாதியினருக்கு மத்தியில் மோதல் போக்கை ஏற்படுத்துகிறார். அதுபோன்ற நிகழ்வுகள் அந்தத் திரைப்படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ருத்ர தாண்டவம் படம் பட்டியலின மக்களின் நியாயமான உணர்வுகளையும் அவர்களின் பாதிப்புகளையும் காட்டுகிறது. அதேவேளையில் திருமாவளவன் போன்றவர்கள் பட்டியல் மக்களை வைத்து சாதிவெறியை உண்டாக்கி அந்த மக்களை கல்வி அறிவில் மேம் படுத்தாமல், மோசமான சூழல் அந்த சமூகத்திற்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த செயலை ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் காட்டியுள்ளனர். அதனால் அந்தப் படத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தில் திருமாவளவன் போன்ற ஒருவர் வரக்கூடிய காட்சிகூட உள்ளது. அவர்கள் எந்த நோக்கத்தில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தப் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ள சூழலை பார்க்கிறோம். வெளிப்படையாக பட்டியல் இன மக்களை தவறாகப் பயன்படுத்தக்கூடிய காட்சி ருத்ர தாண்டவம் படத்தில் வைத்துள்ளனர்.” என்று வேலூர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.
 

click me!