
குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ரூ.615 கோடி ஒதுக்கீடு
2017-18ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க ரூ. 615 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருவன.
அதில், தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக வறட்சி நிலை நிலவுவதால், மக்கள் குடிநீருக்காக பெரிதும் சிரமப்படுகிறார்கள். மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையிலும், போதுமான குடிநீர் வழங்கவும் நிதியாண்டில் ரூ.615 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் சூரிய ஒளி மின் வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 420 கோடி செலவில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். மேலும் நடப்பாண்டில் மொத்தம் 1.96 லட்சம் வீடுகள் 3 ஆயிரத்தி 502.39 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.