பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு... கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பகீர் தகவல்.!

By Asianet TamilFirst Published Aug 25, 2021, 9:58 PM IST
Highlights

பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ. 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 

கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்து அத்துறையின் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். “பயிர்கடன் தள்ளுபடியில் 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்கவேண்டிய கடனைவிட பல மடங்கு உயர்த்தி வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் ரூ. 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம், நாமக்கல்லில் ரூ. 503 கோடி முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
கடன் தள்ளுபடியை எதிர்பார்த்து ஒரு நாளைக்கு முன்பாக திட்டம் போட்டு தள்ளுபடி செய்திருக்கிறார்கள். பயிர்க்கடன் வழங்கும் போது கூட்டுறவு சங்கங்கள் ஏனைய வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளன. அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கணினிகள் உள்ளன. அது சாம்பிரானி போடுவதற்காகவா உள்ளது. அதில் எதுவுமே பதிவு செய்யவில்லை.  ஈரோட்டில் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 66 விவசாயிகளுக்கு பிப்ரவரி 21 அன்று 54,50,000 பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் 12 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2,698 உறுப்பினர்களுக்கு 4.96 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் 16.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஊரான கோச்சடையிலும் அதிகமாகப் பணம் வழங்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13,91,656 பேர் பல வங்கிகளில் 5,896 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பட்டியல் தயார் செய்துவருகிறோம். தகுதியுள்ளவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதல்வர் எடுப்பார். கூட்டுறவு வங்கியில் முறைகேடாக கடன் பெற்று, அதை கந்துவட்டிக்கு விடுகிறார்கள். இது சாதாரண மக்களின் வரிப்பணம் என்பதால் ஏழைகளுக்கு சென்றடைய வேண்டும்.” என்று ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

click me!