
கடந்த ஓராண்டாக காலியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இதுவரை இல்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் தங்களின் வலிமையை இந்த தேர்தலில் நிரூபித்து காட்ட வேண்டும் என்பதற்காக பரஸ்பரம் குற்றம்சாட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
கடந்த முறையை போலவே பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்ததால்தான் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. எனினும் தேர்தல் எந்தவித பிரச்னையும் இல்லாமல் நடந்து முடிந்துவிட்டது. ஆர்.கே.நகரில் 77% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆர்.கே.நகரில் 80% வாக்குகள் பதிவானால், நான் அபார வெற்றி பெறுவேன் என தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 9 மணிக்கெல்லாம் முடிவு தெரிந்துவிடும். கருத்துக்கணிப்புகளை நான் கருத்தில் கொள்ளவில்லை. ஆனால், ஆர்.கே.நகர் மக்கள் எங்களுக்கு நல்ல வெற்றியை தருவார்கள் என தினகரன் தெரிவித்தார்.