சசிகலா மறு சீராய்வு மனு வரும் 5-ந் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம் ஏற்குமா?

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
சசிகலா மறு சீராய்வு மனு வரும் 5-ந் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம் ஏற்குமா?

சுருக்கம்

Re regulation petition of sasikala in supreme court

சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் இருந்து கர்நாடாக உயர் நீதிமன்றம் விடுவித்த போதிலும், அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதிகுன்ஹா தீர்ப்பையே  உறுதி செய்தது.

உடல்நலக்குறைவால், ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, சசிகலா, சுதாகாரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக சீராய்வு மனு கடந்த மே மாதம் 4-ந்தேதி  தாக்கல் செய்யப்பட்டது. 90 நாட்களில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம் என்ற அடிப்படையில் இந்த மனுவை சசிகலா வழக்கறிஞர் செந்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-

முதல் குற்றவாளியான ஜெயலலிதா அரசு ஊழியராக இருந்ததை வைத்தே வழக்கு தொடரப்பட்டது. அவர் இறந்து விட்ட காரணத்தால் வழக்கும் முடிவுக்கு வரும்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தவர்களில் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே அரசு ஊழியர். அதிலும் அவர் இப்போது மரணமடைந்துவிட்டதால், சொத்து குவிப்பு வழக்கு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் அல்லாத தங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வரும் 5-ந்தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால், 3 முதல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தும். இல்லாவிட்டால் தொடக்கத்திலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டால், சசிகலா, சுதாகரன், இளவரசி 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியது வரும்.

மேலும், இந்த மனு விசாரணைக்கு வரும் அதேநேரத்தில் கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மனுவை தள்ளுபடி செய்வதற்கே அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர் சட்ட நிபுணர்கள்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!