டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.அப்போது ஹெலிகாப்டரிலிருந்து மூவர்ணக் கொடி மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தக் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு, பொதுமக்கள் மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள், மூத்த குடிமக்கள் விழாவை நேரில் காண அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான வேளாண்துறை சிறப்பு பதக்கம், கோட்டை அமீர் விருது ஆகியவற்றை விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க உருவாக்கப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோர் அடங்கிய தமிழக ஊர்தி தமிழக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது. அந்த ஊர்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அலங்கார ஊர்தி மூன்று ஊர்திகளாக பிரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறதுமுதல் ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையும் காளையார் கோவில் கோபுரம், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மகாகவி பாரதியாரின் சிலை, சுப்ரமணிய சிவா இன்னொரு ஊர்தியிலும், வ.உ.சிதம்பரனார் தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய மூன்றாவது ஊர்தியும் முதல்வரால் கொடியசைத்து மாநிலம் தழுவிய பயணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதனிடையே டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா?என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர்நீத்தவர், கடலூர் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கர் காந்தியிடம் சர்தார் பட்டம் பெற்றவர். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரர். இவர்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
டெல்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவர்களை புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ள டாக்டர் ராமதாஸ், இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்காக போராடிய, உயிர்நீத்த வடதமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது!(1/3)
— Dr S RAMADOSS (@drramadoss)