
மணல் மாபியா, சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பேட்டை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட வருமானவரித்துறை ஆய்வின் போது கைப்பற்றப்பட்ட குறிப்பேட்டில் தற்போதைய முதலமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நடந்த பேரங்கள் குறித்தும் ,சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் ஆகியோருக்கும் பணம் கொடுத்ததற்காக விவரங்கள் இருந்ததாக வெளியான தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த குறிப்பேட்டில் உள்ள கணக்குகளின்படி மட்டும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டிருப்பது வருமானவரித்துறையினர் மூலம் அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சேகர் ரெட்டியின் டையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், அமைச்சர்களின் தனிச்செயலாளர்கள் ஆகியோரின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ள வருமானவரித்துறை அக்குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்காணிப்புப் பிரிவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும், அதிகாரிகள் மீது வருமானவரித்துறையே ஆதாரங்களை அளித்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொண்ட பிறகும் இன்றும் விசாரணை நடத்தாமல் தாமதிப்பது சரியல்ல என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சேகர் ரெட்டியிடமிருந்து பணம் வாங்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பட்டியலை தலைமைச் செயலாளர் வெளியிட வேண்டும் என்றும்,அவர்கள் மீது விசாரணைக்கும் ஆணையிட வேண்டும் என்றும்
டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.