எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய ராமதாஸ்... அடுத்தது தமிழகத்தில் பாமக ஆட்சிதானாம்..!

By Thiraviaraj RMFirst Published Sep 18, 2021, 1:01 PM IST
Highlights

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 
 

10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிடப்போவதாக அறிவித்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியுடன் இணைந்து பா.ம.க போட்டியிட்டது. ஆனாலும், இரு தேர்தல்களிலும் பா.ம.கவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

இந்நிலையில், தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் பாடாண்தினைக் கவியரங்கம் இணையவழி மூலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசினார். அப்போது, ‘’‘10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம். நம் மிரட்டலுக்கு பணிந்து தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் சட்டம் கொண்டு வரப்பட்டது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் கூட்டணி வேண்டாம் என நான் கூறினேன். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு போதுமானது இல்லை. 15 சதவீத இடஒதுக்கீடு பெறுவதே நமது நோக்கமாக இருந்தது.

தமிழகத்தில், தமிழ் எங்கும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் தமிழ் உள்ளது என நிரூபிப்பவர்களுக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். தமிழ் வளர்ச்சி, மது விலக்கிற்காக நாம் கோட்டையை கைபற்ற வேண்டும். கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலையை தொடங்குகள்’ என்று தெரிவித்தார். ஆக வரும் சட்டமன்றத்த் தேர்தலிலும் தனித்தே பாமக போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. 

click me!