
ரஜினி பாஜகவுக்கு வந்தால், பெரும் பலம் பெரும் என்பதை ஏற்க முடியாது என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.
ஈரோடு கோட்ட மண்டல பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பேசியதாவது:-
தமிழகத்தில் பாஜக பெரும் பலம் பெற்றுள்ளது. நடிகர் ரஜினி பாஜகவுக்கு வந்தால், வரவேற்போம். அதேநேரத்தில் அவர் வந்தால் தான் பாஜக பலம் பெறும் என சொல்வது யாராலும் ஏற்க முடியாது.
தற்போது தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக விபத்துகள் அதிகரித்துள்ளது.
காவல்துறை துணையுடன் டாஸ்மாக் கடைகள் நடத்தப்படுகின்றன. டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்கு தொடரப்படுகிறது. மக்கள் எதிர்க்கும் பகுதியில் டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 16ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்த போகிறோம்.
திமுக தற்போது குளத்தை தூர்வாருவதாக சொல்கின்றனர். இதற்கு முன்னாள் பல குளங்களை அழித்ததே திமுகவினர் தான் . இந்த பாவ செயலுக்கு பரிகாரம் தேடவே தற்போது குளத்தை தூர் வாரி வருகின்றனர்.
யாரை ? எப்போது சந்திக்க வேண்டும் என்பது பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும். யாரையும் பிரித்து தமிழகத்தில் பாஜக வளர வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு தமிழிசை கூறினார்.