
நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா.
சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ரசிகர்களுடனான சந்திப்பில் பேசிய ரஜினிகாந்தின் பேச்சில் அரசியல் நெடி தூக்கலாகவே இருந்தது. தமிழகமெங்கும் ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபடுமாறு ரசிகர்கள் போஸ்டர், பேனர் என வேலையே காட்ட ஆரம்பித்தனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"வாழ்க்கையில் எதிர்ப்பு, ஆதரவு இருப்பது சகஜம்தான். எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அதுவும் அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்" " போருக்கு தயாராக இருங்கள்" என்று ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணத்துக்கு அஸ்திவாரம் போட்டார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிஉள்ள நிலையில் எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என கூறி பா.ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்து உள்ளார்.
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா முன்னணி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம் என்றார் அமித் ஷா.
ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, எப்போதும் எங்களுடைய கட்சிக்கு சூப்பர் ஸ்டாரை வரவேற்போம் என்றார். ரஜினிகாந்த் அரசியல் விஷயங்களில் முன்நோக்கி நகர்வதற்கு முன்னதாக அவர் அரசியலில் இணைய வேண்டும் என்றும் பேசிஉள்ளார் அமித் ஷா.