ரஜினி போட்ட ஒரே போடு... ஒட்டு மொத்த இமேஜும் காலி... என்.டி.ஆர் ஃபார்முலாவில் அதிரடி..!

By Thiraviaraj RMFirst Published Nov 19, 2019, 2:57 PM IST
Highlights

எதிர்கட்சியினர் எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்து கதறிக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்களை சந்தித்து ஆந்திராவில் என்.டி.ஆரை போல அதிரடி அரசியலில் களமிறங்கி முதல்வராகி விடுவது என்கிற திட்டத்தை நோக்கியே அவர் நகர்கிறார். 

ரஜினி அரசியலில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், அதிமுக - திமுக ஆகிய இருகட்சிகளுமே ஆடிப்போய் கிடக்கிறது. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். வந்தாலும் முதல்வராக முடியாது என பலரும் கருத்துக்கூறினாலும் அவர் அரசியலில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வுக்கு பிறகும் ஒரு பலமான பின்னணிப்படை இயங்கி வருகிறது. மேலோட்டமாக நுனிப்புல் மேய்பவர்களே ரஜினிக்கு அரசியல் ஒத்துவராது எனக் கூறுகிறார்கள். 

திமுக நிர்வாகிகள் ரஜினியை வம்பிழுத்து வந்தனர். நடுக்கத்தில் காவி முத்திரை குத்தி பாஜக ஆளாக சித்தரிக்கும் வேலையை தொடர்ந்து வந்தது திமுக. ஆனால் அவர், தனக்கு காவி அடிக்க முடியாது என வெளிப்படையாக அறிவித்ததன் மூலம் திமுகவின் உள்ளடி வேலைகள் எடுபடாமல் போனது. அடுத்து தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் நிரப்பப்படவில்லை எனக் கூறியதால் திமுகவினர் வெகுண்டு எழுந்தனர். 

தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை. அந்த வெற்றிடத்தை ஸ்டாலின் என்னும் காற்றாக மாறி நிரப்பி விட்டார் எனக் கூறினார் துரைமுருகன். ஆனாலும் ரஜினி வெற்றிடம் உள்ளது எனக் கூறியதை திமுகவால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ரஜினி அப்படி பேசியது எடப்பாடியின் ஈகோவையும் சீண்டிப்பார்த்து விட்டது. தான் ஒரு பலமான தலைவராக உருவாகி விட்டதாகவே கருதி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு ரஜியின் இந்தப்பேச்சு ஊசியாக குத்தி விட்டது. பாஜகவை ரஜினி விமர்சித்ததும் எடப்பாடிக்கு ரஜினியை பற்றி வெறுப்பேற்றும் தைரியத்தை கொடுத்தது.

இதனால், எப்போதும் ரஜினியை விமர்சித்து பேசாத எடப்பாடி “ரஜினி ஒரு அரசியல் கட்சியின் தலைவரா? கட்சி ஆரம்பிச்சிருக்காரா? அவர் ஒரு நடிகர் மட்டும்தான். அரசியல் தலைவர்கள் யாராவது சொன்னால் பதில் சொல்லலாம். சம்பந்தம் இல்லாத ஒருத்தர் சொன்னா அதுபத்தி நாம ஏன் கவலைப்படுவானேன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் இதற்கு பதிலடி கொடுத்த ரஜினி “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவர்கள், தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார். முதலமைச்சர் ஆன பின் அவருடைய ஆட்சி 4 நாட்கள் தாண்டாது, 5 நாட்கள் தாண்டாது, ஏன் அதிகபட்சமாக 5 மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும் என்று தமிழகத்தில் சொல்லாதவர்களே கிடையாது. அதிசயமும், அற்புதமும் நிகழ்ந்தது. ஆட்சி கலையவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்”என ஒரே போடாகப்போட்டு எடப்பாடியார் இவ்வளவு காலமாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து இருந்த இமேஜை ஒரே நாளில் டேமேஜாக்கி விட்டார். 

ரஜினியின் விமர்சனங்களால் அதிமுகவினர் அரண்டு போய்க்கிடக்கிறார்கள். தற்போது அமைச்சர்கள் ரஜினியை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எனச்சொன்னதற்கு பதிலடியாக ‘கண்டக்டர் ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்' என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்’என கடுமையாக விமர்சித்துள்ளது. 

திமுக - அதிமுக கட்சிகள் அடிப்படை கட்டமைப்பை வைத்திருந்தாலும் ரஜினி மக்கள் மன்றம் கிராமம், நகரம் ஒன்றியம் என அந்த இரு கட்சிகளுக்கு இணையான கட்டமைப்பு உருவாக்கி வருகிறது. இப்போதே நலப்பணி திட்டங்களை கொண்டு சேர்த்து மக்களிடம் நற்பெயரை பெற்று வருகிறது. கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேவையான ரசிகர்பலம் தான் அதிமுக - திமுகவின் நடுக்கத்திற்கு காரணமே. தனது ரசிகர்களின் பலத்தை அறிந்தே எம்.ஜி.ஆரை போல ரஜினி வேறொரு கட்சியில் இணையாமல் தனியாக அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளார்.

 


அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்காமல் இருப்பதற்கு காரணமும் சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன் கட்சியை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார். காரணம், எதிர்கட்சியினர் எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்து கதறிக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்களை சந்தித்து ஆந்திராவில் என்.டி.ஆரை போல அதிரடி அரசியலில் களமிறங்கி முதல்வராகி விடுவது என்கிற திட்டத்தை நோக்கியே அவர் நகர்கிறார். கட்சிக்கு பலம் சேர்க்கும் விதமாக கல்வி அதிபர்களும், எதிர்கட்சியில் உள்ள முக்கிய முன்னாள் அமைச்சர்களும் ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் வரத் தயாராகி வருகிறார்கள். ஆனால், ரஜினி, தன்னுடன் வருபவர்கள் ஊழலற்றவர்களாக, ஊழலில் சிக்காதவர்களாக, ஆன்மீகத்தை நம்புபவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஆக மொத்தத்தில் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக ரஜினி உருவெடுப்பதால் திமுக- அதிமுக இரு கட்சிகளுமே கலக்கத்தில் இருக்கிறது.  


 

click me!