அதிமுக வாழும்... நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும்... ரைமிங்காக பஞ்ச் வைத்த ராஜேந்திர பாலாஜி..!

By Asianet TamilFirst Published Oct 2, 2020, 9:23 PM IST
Highlights

அதிமுகவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது என்று தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “எடப்பாடி முதல்வர் ஆன பிறகு விவசாயிகளுக்கு நன்மை செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை தொடர்ந்து நிரம்பி கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை. முதல்வர் எடப்பாடியின் புகழை கெடுப்பதற்காகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அவர் முயற்சி ஒரு நாளும் பழிக்காது. அவர் முயற்சி எல்லாமே காணல் நீராகத்தான் போகும்.
எடப்பாடி தலைமையில் தெளிவான ஆட்சி, வலுவான ஆட்சி, வல்லமையான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எந்த வில்லங்கமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும். உத்திரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்தக் குற்றவாளியை சுட்டு தள்ள வேண்டும். அதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடந்துக் கொண்டிருக்கும்போது, அங்கே ராகுல் காந்தி வம்பு செய்ய சென்றிருக்கக் கூடாது. காவல்துறையினர் ராகுல் காந்தியை தடுத்திருப்பார்கள். தள்ளிவிட்டு இருக்க வாய்ப்பு எதுவும் இல்லை. அவர் தவறி விழுந்து இருப்பார்.

ராகுல் காந்தியை தள்ளி விடுவது போன்ற ஈனத்தனமான செயலை உ.பி, முதல்வர் செய்திருக்க மாட்டார். இந்த சம்பவம் சித்திரிக்கப்பட்டது போல தெரிகிறது. ஈனத்தனமான அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பு பிழைப்பைத்தான் கெடுக்கும். வருகிற 6ம் தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிமுக தலைமை அவசர அழைப்பு விடுக்கவில்லை. அதிமுகவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது. அதிமுக என்பது கடல் போல் அவ்வப்போது பொங்கத்தான் செய்யும். ஆனால், கடைசியில் அமைதியாகிவிடும்.

 
அதிமுகவை விட்டு யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். அதிமுக இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி, வெற்றியை நோக்கி அதிமுக செல்கிறது. அதிமுக வாழும்; நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும்” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

click me!