காங்கிரஸ் கட்சி சில மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் கர்நாடகாவில் ஆளும் அரசு நிதியை கொள்ளை அடித்துவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் இதை அவர் தடுக்காவிட்டால் அவருடைய மதிப்பு குறைந்து போகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர்,மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தெலங்கானாவில் மீண்டும் ராஷ்ட்ரீய சமீதி கட்சி ஆட்சியைப் பிடித்தது.
மிசோரம் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு மிசோரம் தேயி முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதனிடையே பாஜகவின் நிலைமைதான் பரிதாபம் ஆனது.
பாஜக ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் அந்த கட்சி ஆட்சியை இழந்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களில் சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை 114 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது, பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படும் நிலையில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதையடுத்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைக்க உள்ளது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பிரதமர் நரேந்தி மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதே போல் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திர சேகர், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சி சில மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளதற்காக ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் கர்நாடகாவில் ஆளும் அரசு நிதியை கொள்ளை அடித்துவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் இதை அவர் தடுக்காவிட்டால் அவருடைய மதிப்பு குறைந்து போகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்ற மாநிலங்கள் உங்கள் சுமையைத் தாங்கட்டும் என்றும் ராஜீவ் சந்திரசேசர் குறிப்பிட்டுள்ளார்.