மத்தியபிரதேசம், சத்தீஷ்கரைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Dec 20, 2018, 8:21 AM IST
Highlights

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடனை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான வங்கிகடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

அண்மையில்  நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை  தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியபிரதேசம் மாநில முதல் அமைச்சராக பதவியேற்ற கமல்நாத் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயிகளின் வங்கிக்கடன் ரத்து செய்யப்படுவதற்கான முதல் கோப்பில் கையொப்பமிட்டார்.

அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில புதிய முதல் அமைச்சராக பதவியேற்ற  பூபேஷ் பாகெல் 6100 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் குறுகியகால கடன்கள் இன்னும் 10 நாட்களில் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். 

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான வங்கி கடன்களை ரத்து செய்து அசோக் கெலாட் தலைமையிலான அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!