போட்டோ ஃப்ளாஸை பார்த்து உயிருக்கு நடுங்கிய ராகுல் காந்தி... லேசரும் இல்லை... தோட்டாவுமில்லை..!

By Thiraviaraj RMFirst Published Apr 11, 2019, 4:28 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் புகைப்படக்காரர் ஒருவரது மொபைல் போனிலிருந்து, பச்சை நிற ஒளி வெளிப்பட்டதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உயிருக்கு குறி வைத்ததாகக் கருதுகிறார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் புகைப்படக்காரர் ஒருவரது மொபைல் போனிலிருந்து, பச்சை நிற ஒளி வெளிப்பட்டதை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உயிருக்கு குறி வைத்ததாகக் கருதுகிறார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் கடந்த 4-ந்தேதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக அவர் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார். அந்த ரோடு ஷோவில் அவரது சகோதரி பிரியங்கா, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, அவர்களது மகன் ரேகன், மகள் மிரயா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ரோடு ஷோவின் போது ராகுல் மீது சாலையின் இரு புறமும் திரண்டிருந்த தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மிக எழுச்சியுடன் இந்த ரோடு ஷோ நடந்து முடிந்தது.

இந்த நிலையில் ராகுல் நடத்திய அந்த ரோடு ஷோவில் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

அதில், ’காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன. ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன. அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்து விட்டு வந்தபிறகு ராகுல் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.

ராகுலை நோக்கி மீண்டும் லேசர் கதிர்கள் பாய்ந்தன. பச்சை நிறத்தில் வந்த அந்த லேசர் கதிர்கள் அவரது தலை மீது குறி பார்த்து வந்தன.

7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது. நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வி‌ஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயிருக்கு, லேசர் வடிவில் அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருக்கிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், ராகுலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எந்தவொரு கடிதமும் காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் புகைப்படக்காரர் ஒருவரது மொபைல் போனிலிருந்து, பச்சை நிற ஒளி வெளிப்பட்டதாக, சிறப்பு பாதுகாப்பு குழுவின் இயக்குநர் தெரிவித்திருக்கிறார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

click me!