போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் வசமாக சிக்கிய R.K சுரேஷ். செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2021, 9:45 AM IST
Highlights

விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் கடந்த வாரத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே சுரேஷ் மீது பண மோசடி புகார் ஒன்றை அளித்தார்.  

தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே சுரேஷ் மீது 1.6 கோடி பண மோசடிப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக முறையாக பதிலளிக்காமல் காவல்துறை அதிகாரிகளிடம் அனைத்தையும் தெரிவித்து விட்டேன் என பத்திரிக்கையாளர்களை மத்தியில் இருந்து நழுவியுள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் கடந்த வாரத்தில் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே சுரேஷ் மீது பண மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ஆர்.கே சுரேஷ், தனது கணவர் ராமமூர்த்தியிடம் 10 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாகக்கூறி  1 கோடி ரூபாய் வாங்கியும், அவரது இடத்தை தனது பெயருக்கு மாற்றி அந்த பத்திரத்தை வங்கியில் வைத்து 4.5 கோடி ரூபாய் கடன் பெற்றும் மோசடியில் ஈடுபட்டதாகவும், எனவே ஆர்.கே சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று ஆர்.கே சுரேஷை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர். அதனடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் ஆர்.கே சுரேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜரானார். மேலும் பொய் புகார் அளித்ததாக வீணா என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையரிடம் ஆர்.கே சுரேஷ் புகாரும் அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்.கே சுரேஷ், கடந்த 12 ஆண்டுகளாக தான் சினிமா துறையில் பணியாற்றி வருவதாகவும், தான் எவ்வளவு நேர்மையானவர் என அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார். மேலும், லோன் வாங்கி தருவதாக பண மோசடி செய்ய வேண்டிய அவசியம் தனக்கில்லை எனவும், ஒரு சிலரின் தூண்டுதலில் பேரிலேயே தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்த நிலையில், கமலக்கண்ணன் என்ற புரோக்கர் மூலம் வீணா அறிமுகமானதாகவும், வீட்டு பத்திரப் பதிவின்போது 93 லட்ச ரூபாயை வீணா மூன்றாம நபர் ஒருவரிடம் பெற்று தனது வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும், அதன் பின்னர் அவர்களின் மோசடி தெரியவர தான் அந்த தொகையை சம்மந்தப்பட்டவரிடம் திருப்பி செலுத்தியதற்கான ஆவணங்கள் புகாருடன் இணைக்கப்பட்டு காவல் துறையினரிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் லோன் தேவைப்பட்டால் தனது வீட்டை தானே வங்கியில் வைத்து கடன் வாங்கி கொள்ள முடியும் எனவும், எதற்காக வேறு ஒருநபர் மீது வீட்டை மாற்றி அவர் மீது கடன் வாங்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்? 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ஆர்.கே சுரேஷிடம் தற்போது வீடு யார் பெயரில் உள்ளது? வீடு பெயர்மாற்றம் செய்யபட்டது உண்மை என்றால் நீங்கள் இன்னும் வீட்டை காலி செய்யாமல் அங்கேயே இருப்பதன் காரணம் என்ன? வீணா மீது என்ன புகாரை முன்வைத்துள்ளீர்கள்? என பல கேள்விகளை முன்வைத்தனர். செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கேட்ட அனைத்து கேள்விக்கும் காவல்துறை அதிகாரிகள் கூறுவதுபோல் ஆர்.கே சுரேஷ் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபற்றி மீண்டும் ஒரு நாள் அனைவரையும் அழைத்து விவரிக்கிறேன், என மழுப்பலாக பதிலளித்து அங்கிருந்து நழுவினார். 

இது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிரிப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு புகார்கள் மீதான விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடங்கியுள்ளனர். மோசடி செய்தது யார்?வீட்டை ஏமாற்றியது யார்? என்ற பல்வேறு கோணங்களில் இருவரையும் தொடர்ந்து நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!