எடப்பாடி பழனிசாமி சீக்கிரம் சிறைக்கு செல்வார்..! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விளாசல்

By karthikeyan VFirst Published Jun 14, 2021, 10:18 PM IST
Highlights

சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
 

அதிமுகவில் பனிப்போர்  நீடித்துவருகிறது. இந்நிலையில், பாமக இல்லையென்றால் அதிமுக 20 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கும் என்று பேசிய பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், ஓபிஎஸ்ஸையும் சாடியிருந்தார்.

இதையடுத்து அன்புமணி ராமதாஸின் கருத்துக்கு அதிமுக செய்தித்தொடர்பாளர் என்ற முறையில், புகழேந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஓபிஎஸ்ஸை சாடிய அன்புமணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால் தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் உதவியுடன் அன்புமணி எம்பி ஆனார் என்றும், ஓபிஎஸையோ அதிமுகவையோ பாமக குறை கூறினாலோ விமர்சித்தாலோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்று புகழேந்தி விளாசியிருந்தார்.

அதிமுக குறித்த அன்புமணியின் விமர்சனத்திற்கு, அதிமுகவிற்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஆதரவாகத்தான் பதிலடி கொடுத்திருந்தார் புகழேந்தி. ஆனால் அவர் திடீரென அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பின்னர், 15 பேரை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உத்தரவிட்டிருந்தனர். அந்த 15 பேரில் அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்துவந்த புகழேந்தியும் ஒருவர்.

கட்சிக்கு ஆதரவாக பேசிய தன்னை கட்சியிலிருந்து நீக்கியதால் கடும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்த புகழேந்தி, பாமகவை நேற்று விமர்சனம் செய்து பேசியதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈபிஎஸ் ஆணவப்போக்கோடு செயல்பட்டு வருகிறார். சர்வாதிகாரியாகச் செயல்படும் பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் ஆதரவுக்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 
 

click me!