
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிமுக அரசை தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டியிருக்கும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார் . சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி , யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாதிரி தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் டெல்லியில் நடக்க உள்ள மாதிரி நேர்முக தேர்வை தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .
வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெறும் மாதிரி நேர்முகத்தேர்வுக்கு மாணவர்கள் செல்ல விமான கட்டணம் உள்ளிட்ட பொருளாதார உதவிகளை , தான் , செய்யவிருப்பதாக கிருஷ்ணசாமி கூறினார் . தொடர்ந்து பேசிய அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை வாழ்வை பணயம் வைத்து இளைஞர்கள் படிக்கிறார்கள் ஆனால் குறுக்கு வழியில் பதவிகளுக்கு செல்பவர்கள் ஏழைகளின் கனவை கலைத்து விடுகிறார்கள் . டிஎன்பிஎஸ்சி என்பது இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் நம்பிக்கையை தகர்க்கும் அமைப்பாக இருக்க கூடாது என்றார் . முறைகேட்டில் கடைநிலை ஊழியர்கள் மட்டும் தண்டிக்கப்படக்கூடாது விசாரணையை விரிவுபடுத்தி மேல்மட்டத்தில் இருப்பவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றார் . ரஜினியின் அரசியல் வருகை மற்றும் கூட்டணி குறித்து தமிழருவி மணியன் தெரிவித்துள்ள கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணசாமி ,
அத்தைக்கு மீசை முளைத்தால் தான் சித்தப்பா என்று அழைக்க முடியும் , அப்படி ரஜினி கட்சியே தொடங்காத போது கூட்டணி குறித்து எப்படி பேச முடியும் முதலில் அவர் காட்சி தொடங்கட்டும் என்று கூறினார் . விஜய் மீதான வருமானவரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இதுவரை எந்த நடிகரையும் வருமானவரித்துறை விட்டு வைத்ததில்லை , ஆகவே நடிகர் விஜய் மீதான சோதனைக்கு அரசியல் கற்பிக்கக் கூடாது என்றார் . எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக கட்சிகள் தயாராகிவரும் நிலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்றார் . அதிமுக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அதிமுக அரசு தூக்கி எறிந்துவிட்டு புதிய தமிழகம் கட்சி ஆட்சிக்கு வரும் என்றார்