
தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதேபோல நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
பல சிறிய நாடுகளிலும் கூட, ஒன்றாம் வகுப்பு முதலே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் குறிப்பாக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படாமல், மாணவர்களை முழுமையாக மதிப்பீடு செய்யாமலேயே 9ம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் மாணவர்கள், பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. 7ம் வகுப்பு மாணவருக்கு 4ம் வகுப்பு கணிதத்தைப் போட தெரியாத சூழல்கூட நிலவுகிறது. இந்த நிலையை மாற்றி தரமான தொடக்க கல்வியை வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதன்படி, மார்ச் மாதம் பொதுத்தேர்வும் அதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மே மாதம் துணைப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வை மனதில் கொண்டு 11ம் வகுப்பு பாடத்தை முழுமையாக நடத்தாமல், 12ம் வகுப்பிற்கு பல பள்ளிகள் கடந்துசெல்வதால், மாணவர்கள் தடுமாறுகின்றனர். இதை மாற்றும் வகையில், தமிழகத்தில் 11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தொடக்கக் கல்வியிலும் இதுபோன்ற குறைகளை களையும் வகையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு கல்வி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.