கூவத்தூரில் பணபட்டுவாடா நடைபெற்ற விவகாரத்தில் தன் பெயர் சேர்க்கப்பட்டது கண்டிக்கதக்கது எனவும் இறைவன் மீது ஆணையாக நாங்கள் குற்றமற்றவர்கள் எனவும் மனித நேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் சரவணன் எம்.எல்.ஏ பல அதிமுக எம்எல்ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறியுள்ள வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மனித நேய மக்கள் கட்சியின் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோருக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டது என சரவணன் கூறியிருந்தார்.
இதற்கு மனித நேய மக்கள் கட்சியின் தமீமுன் அன்சாரி கடும் கண்டனமும் மறுப்பும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று பேசிய தமீமுன் அன்சாரி சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு தொடர்வேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சரவணன் தன்னை சந்தித்து வீடியோவில் வந்த கூற்றுகள் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் எனவே வழக்கு தொடரப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் கூவத்தூரில் கூட்டணி குறித்து பேசும்போது செங்கோட்டையனிடம் தனது தொகுதி சார்ந்த 7 கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், இறைவன் மீது ஆணையாக எவ்வித பணப்புழக்கத்திலும் நாங்கள் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அன்சாரி, இதுபோன்ற வீண் குற்றசாட்டுகளை எழுப்பி எங்களுக்கு உயிரோடு கல்லறை கட்டி விடாதீர்கள் எனவும், அரசியலில் நேர்மையை கடைபிடிது வருவதாகவும் குறிபிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் தனபாலை சந்தித்து மாட்டிறைச்சி தடை குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.