
சிறுபான்மை வாக்கு சிதறிவிடும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ரகசியமாக பாஜகவுடன் உறவு வைத்துள்ளார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
திருமலை நாயக்கரின் 439வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- நாயக்கர் சமுதாயத்தை திமுக அரசு புறக்கணிக்கிறது. திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவுக்கு ஒரு அமைச்சர் கூட மரியாதை செலுத்த வரவில்லை.
பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை எனச் சொல்கிறார்கள். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார வாகன அணிவகுப்பு இல்லை. தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்து வருகிறார். வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார்.
தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை, தமிழர்களின் பணியை உலகுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்திய அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காது. இந்த அளவுக்கு எந்தவொரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம், பெருமையை உலகுக்குச் சொன்னதில்லை. பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார்.
மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் பிரதமரின் அனுமதியால் தான் 11 மருத்துவக்கல்லூரிகள் தற்போது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.