பிரதமர் மோடி அலையால் மட்டுமே ஜெயிக்க முடியாது... பாஜகவினரை ஜெர்க் ஆக்கிய எடியூரப்பா..!

By Asianet TamilFirst Published Sep 20, 2021, 11:06 PM IST
Highlights

பிரதமர் மோடியின் பெயரை சொல்லியே வெற்றி பெற்று விடலாம் என்று மாயநிலையில் இருந்துவிடக் கூடாது என்று கர் நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியிருக்கிறார்.
 

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இந்த பேச்சு பாஜகவினர் மத்தியிலும் கட்சி மேலிடத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அப்படி என்ன பேசினார்? இதோ அவருடைய பேச்சு.. “கர்நாடகாவில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். பிரதமர் மோடியின் பெயரை சொல்லியே வெற்றி பெற்று விடலாம் என்று மாயநிலையில் இருந்துவிடக் கூடாது. கர்நாடகாவில் கடந்த தேர்தலில் நாம் நம்முடைய சேவைகளை சொல்லிதான் வெற்றி பெற்றோம். மோடி அலையால் மட்டுமே நாம் வெற்றி பெற்றுவிடவில்லை. இதை ஒவ்வொரு தொண்டனும் புரிந்து கொள்ள வேண்டும். 
எந்த ஓர் ஆதரவு அலையையும் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கக் கூடாது. எனவே, மக்களிடம் போய்ச் செல்லுங்கள். அவர்களிடம் பாஜக அரசு செய்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு சேகரியுங்கள். அது மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.  ஏதாவது ஓர் அலையை நம்பி எளிதாக வென்று விடலாம் என்று நினைக்காதீர்கள். கர்நாடகாவில் எதிர்க்கட்சிகள் வலிமை பெற்றுள்ளன. எனவே, நாம் அவர்களுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. அடுத்த 2 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும். பிரதமர் மோடி பாஜகவை வலிமைப்படுத்தி உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.” என்று எடியூரப்பா பேசினார்.
எடியூரப்பா பேசியதில் மோடி அலையைப் பற்றி அவர் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. முதல்வர் பதவியிலிருந்து தூக்கியதால் மோடியை மறைமுகமாக அவர் தாக்கி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

click me!