
சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக பிரேமலதா நடித்திருக்கலாம் என அமமுக துணைபொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆரணி மக்களவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக செந்தமிழன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செஞ்சி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய தினகரன், “டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களித்தால் ராகுல் காந்தி பிரதமராகாமல் மீண்டும் மோடி பிரதமராகிவிடுவார் என பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் மோடி ஆட்சிக்கு வந்ததும் கறுப்புப் பணத்தை மீட்டுவந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று உறுதியளித்தார். 15 பைசா கூட போடவில்லை என்று விமர்சனம் செய்தார்.
நேற்று வரை ஜெயலலிதாவை எதிராக நினைத்த பிரேமலதா, இப்போது தன்னை ஜெயலலிதாவாக மக்கள் பாவிக்க நினைத்து விட்டார்கள் பெருமையாக பேசிவருவதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரேமலதா நடித்திருந்தால் இன்னும் சூப்பராக தியேட்டர்களில் ஓடியிருக்கும் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
நீட் தேர்வு ஒழிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார், ஆனால் ரத்து செய்யப்படாது என பியூஷ் கோயல் கூறுகிறார். டாக்டர் ராமதாஸ் முன்பெல்லாம் தைரியமாக இருப்பார். ஆனால், இப்போது மோடியின் மிரட்டலுக்கு பயந்து கூட்டணியில் சேர்ந்துள்ளார். அரசியல்வாதிகள் யாராவது மதத்தைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ பேசினால் யோசித்து வாக்களியுங்கள். எங்கள் வேட்பாளர்கள் பேசினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.