ஆம் ஆத்மிக்காக குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் !! டெல்லி தீவிர பிரச்சாரம் செய்ய திட்டம் !!

By Selvanayagam PFirst Published May 4, 2019, 9:19 PM IST
Highlights

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது  ஆம் ஆத்மி கட்சி மாற்றங்களுக்காக போராடுவதாகவும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளும், பிரகாஷ் ராஜும் செய்தியாளர்களை சந்தித்தினர்  அப்போது பேசிய பிரகாஷ் ராஜ், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

கல்வி, சுகாதாரம் என பல தளங்களிலும் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி குரல் எழுப்பி வருகிறது. நாட்டில் பல்வேறு சிந்தனையோட்டங்கள் கொண்டவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை மீட்க வேண்டுமென நான் உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.

அழிவின் விளிம்பில் இருக்கும் குடியரசை நாம் மீட்டெடுக்க வேண்டும். தற்போது ஆட்சி செய்வோரின் மதவாத, வெறுப்புணர்ச்சி அரசியலால் குடியரசை இழக்கக்கூடிய அபாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்று பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டினார்.

அடுத்த ஒரு வாரத்திற்கு டெல்லியில் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ். வடகிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் திலிப் பாண்டேவை ஆதரித்தும், புதுடெல்லியில் பிரிஜேஷ் கோயலையும், கிழக்கு டெல்லியில் ஆதிஷியை ஆதரித்தும் பிரச்சாரம் நடத்தவுள்ளார் பிரகாஷ் ராஜ். 
கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரகாஷ் ராஜ் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!