நெய்வேலி விபத்துக்கு இதுதான் காரணம்..!! சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்ட பகீர்..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 3, 2020, 7:45 PM IST
Highlights

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பெரும்பான்மையான அலகுகள் காலாவதியானவை. 2011-2015 க்குள் மூடபட்டிருக்க வேண்டிய அனல் மின் நிலையங்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருப்பதே தொடரும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். 

கடலூரில் உள்ள என்.எல்.சி யின் இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில் (01.07.2020) ஒப்பந்த ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இது போன்ற விபத்துகள் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த மாதம் மே 05ம் தேதி கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்தும், அதற்கு இரண்டு நாள் கழித்து மே 07ம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தின் Phase II, Unit 6 பாய்லர் வெடித்ததில் 5 ஊழியர்கள் உயிரிழந்தது நெய்வேலியில் நடைபெறும் தொடர்விபத்துகளுக்கு சாட்சியம். இந்த இரண்டு மாதத்திற்குள் நடந்த 3 விபத்துகள் அளவில் பெரியவை என்று எடுத்துக்கொண்டால், கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு சிறிய விபத்துக்கள் அவ்வபொழுது நெய்வேலி அனல் மின்சார நிலையத்தில் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு முறை விபத்து நடக்கும் போதும், நிர்வாகத்தால் அது தனி நபர் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதே தவிர மைய பிரச்சனைகளை ஆராய்ந்து சரி செய்ததாக தெரியவில்லை. 

நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பெரும்பான்மையான அலகுகள் காலாவதியானவை. 2011-2015 க்குள் மூடபட்டிருக்க வேண்டிய அனல் மின் நிலையங்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருப்பதே தொடரும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். ஒரு பாய்லர் வெடிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் 25வருடம் செயல்படக்கூடிய நிலையத்தை 30-40 வருடங்களாக தொடர்ந்து இயக்கி கொண்டிருப்பது என்பது நிச்சயம் விபத்திற்கான வாய்ப்பினை அதிகரிக்க தான் செய்யும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலையம் (NLTPS) முதல் கட்டத்தில் (phase 1) உள்ள நிலையங்கள் 1962 முதல் 1970 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது, அதே போல் இரண்டாவது கட்டத்தில் உள்ள நிலையங்கள் 1988 முதல் 1993 காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டவை. நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் பெரும்பான்மை அனல் மின் நிலையங்கள் 25 வருடங்களை தாண்டி இயங்கிக்கொண்டிருக்கின்றன. இப்படி காலாவதியான அனல் மின் நிலையங்களை இயக்கும் போது அதன் திறன் குறைகிறது, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதிகமாக தேவைப்படும், இது போன்று பெரும் விபத்துகள் நடப்பதற்கும் அதுவே காரணமாக அமைகிறது.
நேற்றைய விபத்தும் அப்படியே நடந்திருக்கிறது, கடந்த செவ்வாய் அன்று மின் உற்பத்தி தடைபட்ட பிறகு புதனன்று அதை மீண்டும் இயக்குவதற்காக ஊழியர்கள் பாய்லரின் 34 வது மீட்டர் உயரத்தில் முயற்சித்துக் கொண்டிருந்தபோது 84 மீட்டார் உயர பாய்லர் வெடித்ததில் ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 

விபத்து நடந்த இந்த Phase II , Unit 6 சுமார் 26 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது, இதில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கருவிகள் பொருத்துவதற்கு இடமில்லாததால், 2018ம் ஆண்டே மூடப்பட வேண்டியதாக National Electricity plan இல் குறிப்பிடபட்டுள்ளது.50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி கொண்டிருக்கும் NLTPS phase I கடந்த 2011-2015 க்குள் கைவிடப்படுவதாக இருந்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டம், புதிய நிலையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் என பல்வேறு காரணங்களை காட்டி இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாக என்.எல்.சி தொழிலார்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள், என்.எல்.சியின் நிர்வாக சீர்கேடும் அதை தொடர்ந்து ஏற்பட்ட இயக்க தர குறைபாடும் (Poor operational practices) விபத்திற்கான கூடுதல் காரணங்கள். நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் கூற்று இன்று உண்மையாகியுள்ளது.சுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும், விபத்துக்களை அதிகரிக்கும் இது போன்ற அனல் மின் நிலையங்களையும், ஆபத்தான அணு மின் நிலையங்களை மூடவும், வருகின்ற காலநிலை மற்றதை எதிர்கொள்ள, பாதுகாப்பான புதுப்பிக்க கூடிய பரந்துபட்ட (Decentralized) சூரியஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை நோக்கி தமிழ்நாடு அரசு கொள்கைகளைவகுக்கவேண்டுமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதன் மூலம் வலியுறுத்துகிறது. 
 

click me!