கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி ஓவராக ஆட்டம் போடும் மோடி அரசு.. கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..!

By vinoth kumarFirst Published Jul 3, 2020, 6:25 PM IST
Highlights

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க டெண்டர் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து மதுரை நாடாளுமன்றத் தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாருக்கு விட விண்ணப்பங்கள் கோரி ரயில்வே அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நித்தி அயோக் அறிவித்த அதே வழித்தடங்களில் இந்த 151 ரயில்கள் தனியாருக்கு விடப்படும் .35 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும். அவர்களே கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம். டிரைவரும் கார்டும் மட்டும் ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் ஊழியர்களாக இருப்பார்கள். காலப்போக்கில் இவர்களும் தனியார் ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்.

இந்த வண்டிகள் நவீன தொடர் வண்டிகள் ஆக இருக்கும். இந்த வண்டிகள் 16 கோச்சுடன் 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த வண்டிகள் சாதாரண மக்களுக்கான வண்டிகள் ஆக இருக்கப் போவதில்லை. இப்போது எல்லா வண்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தனியாருக்கு அவர்களுக்கு விருப்பமான நேரத்தில் வண்டிகள் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கோவிடை ஒட்டி ஏற்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள ரயில்வே அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்திய ரயில்வேயின் லட்சியங்களில் அதாவது வேகமான பாதுகாப்பான கட்டுப்படியான ரயில்கள் என்ற லட்சியம் தூக்கி எறியப்படுகிறது. 151 ரயில்களில் தெற்கு ரயில்வேக்கு பதினோரு ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி திருநெல்வேலி மதுரை திருச்சி பங்களூரு ஆக 5 ரயில்கள் தனியாருக்கு ஒதுக்கப்படும். இதன்மூலம் தாம்பரம் முனையம் தனியார் முனையமாக மாறிவிடும். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 ரயில்கள் தனியாருக்கு விடப்படும். கோயம்புத்தூர் ஹைதராபாத் மும்பை ஹவுரா டெல்லி ஜோத்பூர் ஆகிய இடங்களுக்கு தனியார் ரயில்கள் விடப்படும். தனியாருக்கு வசதியான நேரம் ஒதுக்கப்படும். அவர்கள் எல்லா வண்டிகளையும் உயர்வகுப்பு வண்டிகளாக மாற்றிக்கொள்வார்கள். கட்டணங்களும் கடுமையாக இருக்கும். ஆனால் மக்களுக்கு வேறு வழி இல்லை என்கிற நிலைமையை உருவாக்கி அவர்கள் இந்த வண்டிகளில் பயணித்து தனியாருக்கு லாபம் ஏற்படுத்திக்கொடுக்க ரயில்வே வழிவகுக்கும்.

இந்த தனியார்மயம் ஏழை மக்களை மிகவும் பாதிக்கும் அத்துடன் ஏற்கனவே நிதியமைச்சகம் உருவாக்கியுள்ள அடிப்படை கட்டமைப்பு திட்ட பாதை என்ற திட்டத்தில் கூறப்பட்டுள்ள படி 2025ல் 500 தனியார் வண்டிகள் ஓட்ட அரசு முடிவெடுத்துள்ளது. அத்துடன் முப்பது சதமான சரக்கு போக்குவரத்தும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல 750 ரயில் நிலையங்களில் 30 சதம் ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்தத் திட்டத்தில் உள்ளது. இவை அனைத்தும் அமல்படுத்தப்படும் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. மற்ற பொதுத் துறைகளை வேகமாக தனியார் மயமாக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இது இருக்கிறது. இதற்கெதிராக மக்களும், ரயில்வே தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

click me!