மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட்டாவது வாங்குவாரா என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் 19 மாநிலங்களில் மட்டுமல்லாமல் மத்தியிலும் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய கட்சியான பாஜக அண்மையில் நடந்த சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று படு தோல்வியடைந்தது.
இதனையடுத்து பாஜகவை நோட்டாவுக்கு போட்டியாக சித்தரித்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர். நேற்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பி.யும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, தமிழகத்தைக் பொறுத்தவரை, பாஜகவுக்கும், நோட்டாவுக்கும்தான் போட்டி என கிண்டல் செய்தார்.
தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியாத நிலையில்தான் தேசியக் கட்சிகள் உள்ளன. நோட்டாவைவிடக் குறைவான வாக்குகளைப் பெற்றதுதான் தேசியக் கட்சிகளின் சாதனை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் பாஜக பின்னடைவை நோக்கி செல்கிறது என தெரிவித்தார்.
சென்னை ஆர். கே நகர் தொகுதி தேர்தலில் பாஜக நோட்டாவை மிஞ்ச முடியவில்லை என அதிரடியாக பேசிய வைகைசெல்வன், . கன்னியாகுமரியில் மீண்டும் பொன்னார் போட்டியிட்டால் டெபாசிட் வாங்குவாரா என்பது சந்தேகம் தான் என விளாசித் தள்ளினார்.