Pongal Gift: பொங்கலுக்கு காசு கிடையாதாம்.. பொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Dec 23, 2021, 1:02 PM IST
Highlights

பொங்கல்  பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து நேற்று வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் ரொக்கம் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றிக்கையில்  ரொக்கம் பணம் என்ற  வார்த்தையை நீக்கப்பட்டுள்ளது. 
 

பொங்கல்  பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து நேற்று வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் ரொக்கம் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றிக்கையில்  ரொக்கம் பணம் என்ற  வார்த்தையை நீக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், 2022ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூபாய் 505 செலவில் வழங்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 20 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரூபாய் 2500 வழங்கப்பட்ட நிலையில் தற்போது மழை வெள்ளம், கொரோனா ஆகிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரொக்கம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொடர்பாக நேற்று சுற்றிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்தும் ரொக்கம் என்ற வார்த்தை இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!