
கப்பல்கள் மோதலால் வங்கக்கடலில் கசிந்த எண்ணெய்ப் படலங்களை அகற்றும் பணி 80% முடிவடைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த வாரம் வங்கக் கடலில் இரு சரக்கு கப்பல்கள் மோதிக் கொன்டதால் வங்கக் கடல் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் படலங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த எண்ணெய்க் கசிவால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ள நிலையில் அந்த படலம் தற்போது 80% அகற்றப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள படலங்கள் இன்னும் 3 நாட்களில் அகற்றப்படும் எனவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் எண்ணெய்ப் படலம் நீக்கப்படும் பணிகளை பார்வையிட்ட கடலோர காவல்படை ஐ.ஜி ராஜன் பர்கோத்ரா பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது , எண்ணூர் துறைமுகத்திலிருந்து சரியாக 2 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவில் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை சுமார் 74 கி.மீ தூரத்திற்கு மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
19 ஹெலிகாப்டர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணெய் கசிவால் ஆர்.கே குப்பம் பகுதி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜன் தெரிவித்தார்.
மேலும் மெரினா கடற்கரையில் 80% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் நாளை மாலைக்குள் மெரினா பகுதி தூய்மைப்படுத்தப்படும் எனவும் ராஜன் தெரிவித்துள்ளார்.