பொள்ளாச்சி விவகாரம்... துணை சபாநாயகரை தூரத்தில் தள்ளி வைக்கிறதா அ.தி.மு.க...!

By Vishnu PriyaFirst Published Mar 22, 2019, 5:50 PM IST
Highlights

பொள்ளாச்சி பாலியல் பஞ்சாயத்து விவகாரத்தில் அந்த தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தமிழக சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் பெயர் அடிபட்டதையும், ஜெயராமன் அதை ஆவேசமாக மறுத்ததோடு ‘என் குடும்பத்தின் மீது அவதூறு பரப்புகிறார்!

ஆனைக்கு அடி மட்டும்தான் சறுக்கும்! ஆனால்  அ.தி.மு.க.வோ பொள்ளாச்சியில் அந்தரத்தில் கவிழ்ந்து அய்யோ பாவமாய் தொங்குகிறது!...என்று இணையத்தில் தி.மு.க.வினர் வெச்சு செய்கிறார்கள் ஆளுங்கட்சியை. இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை, ‘கொஞ்சநாள் அமைதியா இருங்க!’ என்று தலைமை ஒதுக்கி வைத்துள்ளதாக சொல்லி கிளம்பியிருக்கும் பரபரப்பு வைரலாகி இருக்கிறது ஆளுங்கட்சியில். 

பொள்ளாச்சி பாலியல் பஞ்சாயத்து விவகாரத்தில் அந்த தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தமிழக சட்டசபை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் பெயர் அடிபட்டதையும், ஜெயராமன் அதை ஆவேசமாக மறுத்ததோடு ‘என் குடும்பத்தின் மீது அவதூறு பரப்புகிறார்!’ என்று ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது புகார் கொடுத்ததும் பெரும் பரபரப்புகள். 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வைபரேஷன் துவங்கிவிட்ட சூழலில் பொள்ளாச்சி விவகாரம் சற்றே அமைதியாக துவங்கியுள்ளது. ஆனாலும் கூட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பழைய ஜோரில் அதிகமாக வெளியே வரவில்லையாம். இதன் பின்னணி என்ன? என்று தோண்டித் துருவிப் பார்த்தது அவருக்கு ஆகாத அதே கட்சியின் எதிர்கோஷ்டி ஒன்று. தாங்கள் கண்டறிந்த தகவல்களை அப்படியே பரப்பவும் துவக்கியுள்ளனர். 

 

அதாவது...என்னதான் பொள்ளாச்சி விவகாரம் கடந்த நாலைந்து நாட்களாக பரபரப்பாக இல்லாவிட்டாலும் கூட தமிழக மக்கள் இந்த பயங்கரத்தை மறக்கவில்லை. அவர்கள் அதை மறந்துவிடாதபடி சில ஊடகங்களும் தொடர்ந்து இதை எழுதிக் கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் பொள்ளாச்சியார் மகனின் பிரவீன் சென்ற கார் கடந்த சில வருடங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளாது, அதில் கல்லூரி இளம்பெண் ஸ்பாட் அவுட் ஆனது, அந்த வழக்கின் பின்னணி என எல்லாவற்றையும் தோண்டி எடுத்து எழுதுவதால் மக்கள் பொள்ளாச்சியார் மகன் தொடர்பான விஷயங்களை மறப்பாதாக இல்லை. 

இதையெல்லாம் கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்த தலைமை, சீனியர் மோஸ்ட் லீடரான பொள்ளாச்சியாரிடம் ‘அண்ணா கொஞ்சம் ஓய்வா இருங்க. உங்க மனசு ரொம்ப காயப்பட்டிருக்கு, குடும்பத்திலும் குழப்பங்கள், வருத்தங்கள் இருக்குது. அதனால அதை கவனிச்சு சரி பண்ணுங்க ஃப்ரீயா. இந்த தேர்தல் வேலைகளை நாங்க கவனிச்சுக்குறோம். ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம், பிரஷர் பிரச்னை உள்ள மனுஷன் நீங்க. அதனால வெயில்ல அலைஞ்சு திரிஞ்சு உடம்பை வருத்திக்க வேணாம். அமைதியா  இருங்க கொஞ்ச நாள் . நாங்க கவனிச்சுக்குறோம். அப்புறமா ஆசுவாசமா வாங்க!’ என்று நயமாக சொல்லியிருக்கிறார்கள். 

அதாவது ‘மக்கள், அதிலும் குறிப்பா கோயமுத்தூர் மாவட்ட பெண்கள் உங்க மேலே ஓவர் கடுப்புல இருக்கிறாங்க. உங்க பசங்க தப்பு செஞ்சாங்களோ இல்லையோ அதெல்லாம் பிரச்னை இல்லை. மக்கள் முன்னே நீங்க வராம இருக்கிறது எல்லாவிதத்திலேயும் எல்லாருக்கும் நல்லது. அதனால அமைதியா இருங்க. பிரசாரத்துக்கு வரவேண்டாம்!’ன்னு பொருள் பட தலைமை சொல்லிடுச்சு, சாணக்கியமான அரசியல்வாதியான பொள்ளாச்சியாரும் இதை புரிஞ்சுக்கிடுவார். பரபரப்புக்கு பிறகு இப்ப லேசா அரசியல் செய்ய துடிக்கிற மனுஷனை அமுத்தத்தான் இந்த தகவலை சொல்லியிருக்காங்க. இதை கேட்காம மீண்டும் அவர் பிரசாரம், தேர்தல் வேலைன்னு வந்து நின்னால் ஸ்ட்ரிக்டாவே சொல்லிடுவாங்க போல!” என்ரு கிளப்பியிருக்கின்றனர். 

பரவும் இந்த தகவல் பற்றி பொள்ளாச்சியாரிடம் கவலையோடு அவரது அரசியல் நண்பர்கள் விசாரிக்க...”நான் தலைவர் காலத்து அரசியல்வாதி. என் வீட்டுக்கே வந்து எனக்காக காத்திருந்து தலைவர் சாப்பிட்டுவிட்டு போயிருக்கார். அம்மாவும் என்னை நல்ல இடத்துலதான் உட்கார வெச்சாங்க. அவ்வளவு மதிப்புடைய என்னை ஒரு வதந்தியை வெச்சு முடக்கிட பார்க்கிறாங்க. அது நடக்காது.” என்று கர்ஜிக்கிறாராம். இந்நிலையில், பொள்ளாச்சியாருக்கு எதிராக ’அ.தி.மு.க.விலிருந்து மெதுவாக பொள்ளாச்சியார் ஒதுக்கப்படுகிறார்!’ எனும் பட்டாசை பற்ற வைத்ததே அவரது உட்கட்சி எதிரியான அமைச்சர் ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள்தான்! என்று தகவல் தந்தியடிக்கிறது.

click me!