இதெல்லாம் வழிப்பறி கொள்ளைக்குச் சமம்... மத்திய, மாநில அரசுகளை வறுத்தெடுத்த சரத்குமார்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 2, 2021, 7:09 PM IST
Highlights

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுஅன தலைவர் சரத்குமார் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டுகொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டியுள்ளார். 

கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டியுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வருகின்றனர். 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுஅன தலைவர் சரத்குமார் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டுகொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா காலத்தில் வேலையின்றி, வருமானமின்றி அடித்தட்டு மக்கள் திண்டாடி வரும் சூழலில், பெட்ரோல் விலை சென்ச்சுரியை கடந்தும், டீசல் விலை சென்ச்சுரியை நெருங்கியும், சமையல் எரிவாயு விலை 1000 - ஐ நெருங்கியும் கொண்டிருப்பது பெருங்கொடுமை.

மக்களின் சுமையை குறைத்து சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஆரோக்கியமான கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பதே அரசின் முதல் கடமை. அக்கடமையை மறந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை தங்கள் விருப்பத்துக்கு நிர்ணயித்து, நாள்தோறும் விலையை உயர்த்தி கொண்டே போவது ஏழை மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது, பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் காய்கறிகள், மளிகை உள்ளிட்ட பலசரக்கு சாமான்கள், போக்குவரத்தின் விலையேற்றத்திற்கு காரணமாக அமையும் என்பது அரசிற்கு தெரியாதா? மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி கவலையில் ஆழ்ந்திருக்கும் சமயம் பொருட்களின் விலையேற்றம், பசியால் மக்கள் உயிர்போகும் நிலைக்கு தள்ளும் என்பதை உணர வேண்டும்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் வழங்கி, பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றத்தின் மூலம் அரசே அதனை பறித்துக் கொள்வது வழிப்பறி கொள்ளை போன்றதுதான். ஒருபுறம் பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம், மறுபுறம் சுங்கச்சாவடிகளின் நேரடி பகல் கொள்ளை என விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறுவது தடுக்கப்பட வேண்டும். எனவே, மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்தோடும், கருணையோடும் மக்கள் வலிகளை உணர்ந்து துரிதமாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 

click me!