
ஜெ, அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை !! அது தொண்டர்களின் கோவில்!!! விவேக் ஜெயராமன் விளக்கம் ….
ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கோவிலாக நினைக்கும் ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பது வேதனையளிப்பதாகவும், அவரது அறையை சோதனை நடத்த தான் அனுமதிக்கவில்லை என்றும் விவேக் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போய்ஸ் தோட்ட வேதா இல்லத்தில் நேற்று இரவு தொடங்கிய வருமான வரி சோதனை தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்தது. அதிகாலை 2 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் 2 லேப் டாப்கள், 2 பென் டிரைவ்கள், ஜெயலலிதாவின் சில கடிதங்கள் போன்றவற்றை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததும், இரவு, 10:30 மணிக்கு, விவேக்கும், அவரது மனைவியும் அலறியடித்து அங்கு ஓடி வந்தனர். முதலில் அவர்களை இல்லத்துக்குள் அனுமதிக்க மறுத்த அதிகாரிகள் பின்னர் விவேக்கை மட்டும் அனுமதித்தனர்.
நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விவேக், ஜெயலலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் சோதனையை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பும்போது, ஜெயலலிதாவுக்கு வந்த சில கடிதங்கள், 2 லேப்டாப்கள், ., 2 பென் டிரைவ் போன்றவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நேரில் அழைக்கும்போது உரிய விளக்கம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.