
விஜய் நடிக்கும் 'சர்க்கார்' திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். தவறினால், அதற்கான விளைவுகளை நடிகர் விஜய்யும், சிகரெட் நிறுவனங்களிடம் பெரும் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ள சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் சந்திப்பார்கள் என பாமக வின் அங்கமாக இருக்கும் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இரா.அருள் தனது முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிகரெட் நிறுவனங்களிடம் பெரும் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, திரைப்பட தயாரிப்பாளர்கள் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளை திணிப்பதாக 2009 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் கூறியது.
தற்போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு விஜய் நடிக்கும் 'சர்க்கார்' படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளை அமைப்பதாக தெரிகிறது.
2007-ல் பத்திரிகைகளுக்கு நடிகர் விஜய் அளித்த பேட்டியில் 'மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று இனி புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன்' என்று உறுதியளித்தார்.
ஆனால், அதன் பின்னர் 2012-ல் துப்பாக்கி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சியுடன் விளம்பரம் வெளியானது. அதனை பசுமைத் தாயகம் அமைப்பு எதிர்த்ததை தொடர்ந்து அப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி தவிர்க்கப்பட்டது. அதன் பின்னரும் கூட மெர்சல் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது.
இந்நிலையில், மீண்டும் விஜய் நடிக்கும் 'சர்க்கார்' எனும் புதிய படத்தின் முதல் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் டிவிட்டர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர்.
திரைப்பட கதாநாயகர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
1. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது. (Effect of Smoking on Movies - THE LANCET 2003)
2. உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட "பாலிவுட்: பலியா அல்லது நண்பனா" எனும் ஆய்வில் இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்தது. கூடவே, சிகரெட் நிறுவனங்களிடம் திருட்டுத்தனமாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அந்த ஆய்வு வெளிக்கொண்டுவந்தது. (WHO Report: “BOLLYWOOD” VICTIM OR ALLY- WHO 2003)
4. உலக சுகாதார நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட "புகையில்லா திரைப்படங்கள்: ஆதாரங்களில் இருந்து செயல்பாட்டுக்கு" எனும் நூலில் - திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் பெரும் கேடாக மாறிவிட்டதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. (WHO Report: Smoke-free movies- from evidence to action WHO 2009)
5. "பாலிவுட் படங்களில் புகையிலை பயன்பாடும், விளம்பரமும், அவற்றால் இந்திய இளைஞர்களின் புகையிலைப் பழக்கமும்" எனும் 2011 ஆம் ஆண்டு ஆய்வுக்கட்டுரை, திரைப்படம் பார்க்கும் இந்திய இளைஞர்கள் புகையிலைக்கு அதிகம் அடிமையாவதை நிரூபித்துள்ளது. (WHO Report: Tobacco use in Bollywood movies, association with tobacco use among Indian adolescents)
6. 26.03.2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், "திரைப்படங்கள் மூலம் திணிக்கப்படும் மறைமுக புகையிலை விளம்பரங்கள் சமுதாயத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன". "திரைப்படங்களில் புகைபிடிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பின் 21 ஆம் பிரிவில் உறுதியளிக்கப்பட்டுள்ள குடிமக்களின் உயிர்வாழும் உரிமை பாதிக்கப்படும்", "திரைப்படங்களில் புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்தும் விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது. (Kerala Voluntary Health Services Vs. Union of India)
"எச்சரிக்கை"
விஜய் நடிக்கும் 'சர்க்கார்' திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். தவறினால், அதற்கான விளைவுகளை நடிகர் விஜய்யும், சிகரெட் நிறுவனங்களிடம் பெரும் பணத்தை லஞ்சமாக பெற்றுள்ள சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் சந்திப்பார்கள் என பதிவில் கூறியுள்ளார்.