மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல் ஹாசன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்திருந்தார். அது குறித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் பேசும்போது, கமல் மக்களை சந்திக்காமல், தலைவர்களை சந்திதது வருகிறார் என்றும், நாங்கள் மக்களை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், திருப்போரூரை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்குப் பிறகு அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மக்களைச் சந்திக்க வேண்டிய கமல், தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
தமிழக மக்களுக்காக போராடக் கூடிய கட்சி அதிமுக. அதிமுகவுக்கு யாரும் சவாலாக இருக்க முடியாது. ஏனென்றால் இது அம்மாவின் கட்சி. தொடர்ந்து தமிழக மக்களுக்காக போராடக் கூடிய கட்சி. கூட்டணியே இல்லாமல் தனித்து நின்று வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொண்ட கட்சி என்றும், தேர்தல் வரை கமல் ஹாசன் இருக்கிறாரா என்று பாருங்கள் என்றார் எம்.பி. மைத்ரேயன்.