மத்திய அமைச்சரா இருந்துகிட்டு நீங்களே இப்படி பேசலாமா..? பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடம்பூர் ராஜூ பதிலடி

First Published Jun 22, 2018, 10:33 AM IST
Highlights
minister kadambur raju retaliation to pon radhakrishnan


மாநில சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அப்படியிருக்கையில், மத்திய அமைச்சராக இருந்துகொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பற்றி விமர்சிப்பது சரியாக இருக்காது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறிவருகிறது; ஆனால் அதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். 

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் விமர்சனத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்களும் அவ்வப்போது பதிலளித்து வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் வள்ளிநாயகபுரத்தில் தண்ணீர் தொட்டி மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை திறந்துவைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொன்.ராதாகிருஷ்ணனின் விமர்சனம் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தமிழகம் எப்போதுமே அமைதி பூங்காவாகவே திகழ்கிறது. தமிழகத்தில் பயங்கரவாதத்துக்கு என்றுமே இடமில்லை. தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்வதால்தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு வந்து தொழில் தொடங்குகின்றனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. அப்படியிருக்கையில், மத்திய அமைச்சராக இருந்துகொண்டு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை விமர்சிப்பது சரியாக இருக்காது என பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!