இது கடைசி எச்சரிக்கை.. ராணுவம் வந்தாலும் பூட்டு போட்டுவிடுவோம்.! எச்சரித்த அன்புமணி ராமதாஸ் !

By Raghupati RFirst Published Sep 4, 2022, 4:47 PM IST
Highlights

என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டபோது சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வீடு, நிலம் கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டது.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தைக் கண்டித்து பாமக சார்பில் இன்று காலை நெய்வேலி ஆர்ச்கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'என்எல்சி நிறுவனம் 1956 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டால் அதனால் ஏற்படும் வளர்ச்சி அந்த பகுதி மக்களுக்கு பயன்பட வேண்டும்.

ஆனால், என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டபோது சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வீடு, நிலம் கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டது. கடந்த 66 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உரிய இழப்பீட்டுத் தொகையோ வழங்காமல் இன்று வரை மக்களை அகதிகளாக என்எல்சி நிர்வாகம் வைத்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு..அண்ணாமலைக்கு பயந்து அரசியலை விட்டு வெளியேறும் பிடிஆர்.. கொண்டாட்டத்தில் பாஜக - உண்மையா?

என்எல்சி நிர்வாகம் நிலக்கரி தோண்டுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை. என்எல்சி நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி வருகின்றனர்.

வீடு, நிலம் கொடுத்த பொதுமக்கள்,விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற என்எல்சி பொறியாளர்கள் தேர்வில் 299 பேர் தேர்வு செய்யப்பட்டதில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. எனவே தமிழருக்கு தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

என்எல்சி நிர்வாகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் விரைவில் நடத்துவோம். ராணுவத்தை கூட்டி வந்தாலும் எதிர்த்து நின்று எங்களது பணியை செய்வோம். இப்பகுதியில் உள்ள நமது மாவட்ட செயலாளர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்றென்றும் உங்களோடு தோள் கொடுப்பார்கள் உங்களை மீறி ஒரு பிடி மண்ணைக் கூட என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்த முடியாது. என்எல்சி நிறுவனத்தில் தமிழக அரசுக்கு நாலு சதவீத பங்குகள் உள்ளது.

அதன் காரணமாக தமிழக அரசு சார்பில் இயக்குனர் பெறுப்பில் உள்ளார். அதன் மூலம் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை கண்காணித்து முழுமையாக செயல்படுத்திட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் என்எல்சி நிர்வாகத்திற்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும் வேண்டும் இல்லையென்றால் என்எல்சி நிர்வாகத்தை அகற்றும் வகையில் பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்’ என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..திமுகவுடன் கைகோர்க்கும் மக்கள் நீதி மய்யம்.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு முட்டுக்கட்டை போட்ட கமல் !

click me!