மீண்டும் அதிமுக கூட்டணியில் பாமக? நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Sep 20, 2021, 11:00 AM IST
Highlights

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்ததும் பாமக நிர்வாகிகள் சிலர் ஆர்வத்துடன் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விருப்ப மனு அளிப்பது குறைந்ததாக கூறுகிறார்கள். இது குறித்து விசாரித்த போது பாமகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் மட்டுமே போட்டியி அக்கட்சி நிர்வாகிகள் தயாராக இருப்பது தெரியவந்தது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்று பாமக அறிவித்த சில தினங்களிலேயே மறுபடியும் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி அண்மையில் முடிந்த சட்டப்பேரவை தேர்தல் வரை அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்று இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக நீடித்தது. அந்த தேர்தலில் கணிசமான அளவில் ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் மட்டும் அல்லாமல் ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்கள் பதவிகளை பாமக கைப்பற்றியது.

இந்த சூழலில் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி நீடிக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் திடீரென கடந்த வாரம் செவ்வாய்கிழமை, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக, தனித்து போட்டி என்று அறிவித்தது. ஆனால் மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் ஜி.கே.மணி தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதாகவும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துபோட்டி என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கத்திற்கு பிறகு பாமகவிற்கு எதிரான விமர்சனத்தை அதிமுக நிறுத்திக் கொண்டது. இப்படியான நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட பாமக விரும்புவதாக கூறி அக்கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் என்பதையும் தாண்டி, நடைப்ற்றதாகவும் கூறப்படுகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்ததும் பாமக நிர்வாகிகள் சிலர் ஆர்வத்துடன் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் விருப்ப மனு அளிப்பது குறைந்ததாக கூறுகிறார்கள். இது குறித்து விசாரித்த போது பாமகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் மட்டுமே போட்டியி அக்கட்சி நிர்வாகிகள் தயாராக இருப்பது தெரியவந்தது. அந்த வகையில் பாமக சார்பில் போட்டியிட வெறும் 10 சதவீதத்திற்குள் குறைவான இடங்களில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் ஆகியிருப்பதாகவும் கூறுகிறார்கள். தலைமை அழைத்து பேசிய பிறகு ஆங்காங்கே சிலர் வேட்பு மனு தாக்கல் தொடங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டச் செயலாளர்கள், கண்டிப்பாக கூட்டணி வேண்டும் என்கிற விருப்பத்தை தலைமையிடம் கூறியதாகவும், அத்தோடு தலைமை அனுமதி அளித்தால் போதும் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்வதாக அவர்கள் கூறியதாகவும் சொல்கிறார்கள். இதனை அடுத்து தலைமை கொடுத்த அறிவுறுத்தலின் படி செல்போன் மூலமாக செங்கல்பட்டு பாமக நிர்வாகிகள் அதிமுக தலைமையை தொடர்பு கொண்டு கூட்டணி பேசியதாகவும், பாஜக இதற்கு ஆதரவாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் இதில் திடீர் ட்விஸ்டாக எடப்பாடி பழனிசாமி, வந்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் வாருங்கள், ஒரு மாவட்டத்திற்கு என்றெல்லாம் வராதீர்கள் என்று கூறிவிட அவரை செங்கல்பட்டு மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் சமாதானப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.

click me!