பாமக தப்பிக்கவே முடியாது, பதில் சொல்லியே ஆகவேண்டும்.. நீதிமன்றம் அடித்த ஆப்பு.. அலறும் ராமதாஸ்.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 2:32 PM IST
Highlights

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  எஸ்.எம் சுப்ரமணியம் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க சட்டம் வழிவகை செய்கிறது, இந்த வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிப்பதில் எந்த தடையும் இல்லை, 

மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில் இழப்பீடு வசூலிப்பது குறித்த விசாரணைக்கு  ஆஜராகும்படி பாமகவுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து  செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது பாமக, அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் (பவுர்ணமி திருவிழா) சித்திரைத் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பாமகவினர் மரக்காணம் கட்டையன் தெரு காலனியில் இறங்கி கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது காலனி பகுதி மக்கள் கடுமையாக தாக்கப்பட்டதுடன் அவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். அதைக் கண்டித்து 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சி தொண்டர்களும் கைது  செய்யப்பட்டனர்.  

முன்னதாக ஏப்ரல் 25 முதல் மே மாதம் 19ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது  அதில் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக இழப்பீடு வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி பாமக தலைவர் ஜி.கே மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசு அனுப்பிய நோட்டீஸில் போக்குவரத்து இயங்காததால் ஏற்பட்ட இழப்பை வசூல் செய்வது தொடர்பாக அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து துறை தரப்பில் மொத்தம் 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பாமகவினர் நடத்திய கலவரத்தால் பலகோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  எஸ்.எம் சுப்ரமணியம் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க சட்டம் வழிவகை செய்கிறது, இந்த வழக்கிலிருந்து பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களிடமிருந்து இழப்பீடு வசூலிப்பதில் எந்த தடையும் இல்லை, கலவரத்தில் பேருந்துகள், டாஸ்மாக் கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, இந்த வழக்கில் முழு விசாரணை நடத்திய பிறகு இழப்பீடு நிர்ணயிக்கப்படும், இதில் நிச்சயம் பாமக விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, பாமகவுக்கு எதிராக வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார். இது தொடர்பான விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். 

அரசியல் கட்சிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும், போராட்டங்கள் செய்யும்போது ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களிடமிருந்து இழப்பீடு வசூல் செய்ய முடியாமல் போவதற்கு காரணம், போராட்டத்தில் ஈடுபடுவோர் மாறி மாறி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார் மொத்தத்தில்  ஆளும் கட்சியினரே கூட இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார். 
 

click me!