அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவது நியாயமா.? ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு.

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 1:48 PM IST
Highlights

இது மட்டுமல்லாமல் பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதி இல்லை என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் சில அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் வேட்டி சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ  மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கான வேட்டி சேலை வழங்கும் திட்டம், ஆகிய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து, கைத்தறி ரகங்களை பிரபலப்படுத்தும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப  பாரம்பரிய மற்றும் நவீன ரகங்களை உருவாக்குதல் பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களை செயல்படுத்துதல் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்புகளை வழங்குதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் விளங்குகிறது. 

கைத்தறித் துறைக்கு தன்னிகரற்ற பங்களிப்பை அளித்து வருவதோடு நெசவாளர்களுக்கு நீடித்த வேலை வாய்ப்பினை வழங்கி வரும் இந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தன்னுடன் இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை நாடு முழுவதும் பரவியுள்ள தன்னுடைய நூற்றுக்கணக்கான கிளைகள் மூலமாக விற்பனை செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது. தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கும் துணி தொழிலை சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையாளர்களின் பல ஆண்டுகளாக இரவு 8 மணி வரை இருந்த பணி நேரம் இப்போது 9 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 20 கிலோமீட்டர் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பல பேருந்துகள் மாறி பணிக்கு வரும் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் 9 மணிக்கு மேல் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட கூடிய நிலைமை பெண்களுக்கு உருவாகியுள்ளதாகவும் இன்று பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளது. 

இது மட்டுமல்லாமல் பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதி இல்லை என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் சில அதிகாரிகள் பெண் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும், விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்த பயனும் இல்லை என்பதால், வருகிற அக்டோபர் 5ஆம் தேதி கோ ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கு தீர்வு காணப்படவில்லை என்றால் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. 

கோ-ஆப்டெக்ஸ்  ஊழியர்களுடைய கோரிக்கைகள், நிதி தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இல்லாத சூழ்நிலையில் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதும், அவர்களுடைய போராட்ட அறிவிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வு காண தொடர்புடைய அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!