
தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஜெயக்குமாரை ஆதரித்து சென்னையில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அந்தப் பிரசாரம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, திருமாவளவன் ஏன் வேறெங்கும் பிரசாரத்துக்கு செல்லவில்லை என்பது குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார்.
''திமுக கூட்டணியில் நவீன தீண்டாமையைக் கடைப்பிடித்துவருகிறார் மு.க. ஸ்டாலின். திருமாவளவன் கட்சியின் கொடியையோ, பெயரையோ எங்கும் போடக் கூடாது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் அக்கட்சியின் கொடியையும் பெயரையும் பயன்படுத்தலாம் என்று கட்சிக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால்தான் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலேயே உள்ளார்.
திருமாவளவனை கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் அழைப்பதில்லை. திமுக கூட்டணிக்குள் இப்படி ஒரு நவீன தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் திருமாவளவன் இதைப் பற்றி நிச்சயம் பேச போகிறார். திமுகவினர் தனி நபர் விமர்சனங்களை மோசமாக முன்வைக்கிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தத் திட்டத்தைக் கொடுப்போம், அந்தத் திட்டத்தைக் கொடுப்போம் என்று பேசிவந்த மு.க.ஸ்டாலின், தற்போது என்னையும், கட்சி நிறுவனரையும், முதல்வரையும் பிரதமரையும் மிக மோசமாக விமர்சித்து பேசி வருகிறார். அவருடைய மகன் உதயநிதியும் கீழ்த்தரமான தெருப்பேச்சாளர் போல பேசுகிறார்.
ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். நீங்கள் ஒரு மேடையைப் போடுங்கள். நான் அங்கே வருகிறேன். நீங்கள் வாருங்கள் அல்லது உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வையுங்கள். தமிழக நலன் சார்ந்த திட்டங்களைப் பற்றி விவாதம் பண்ணலாம். நான் அந்த விவாதத்துக்குத் தயார்''. என்று அன்புமணி தெரிவித்தார்.