ஆட்டத்தை ஆரம்பித்த அழகிரி ! ஆதரவாளர் போடியிடுவதால் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Apr 4, 2019, 11:36 PM IST
Highlights

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் ஒருவர் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2104 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக அழகிரி வேலை செய்ததால் நிரந்தரமாக அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு கருணாநிதி மறைந்தார். இதன் பின்னராவது தன்னை திமுகவில் சேர்த்துக் கொள்வார்கள் என அழகிரி எதிர்பார்த்தார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அழகிரி திமுகவில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதையடுத்து திமுகவுக்கு எதிராக அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக, ஸ்டாலின் குறித்து பல எதிரான கருத்துக்களை அவ்வப்போது அழகிரி தெரிவித்து வந்தாலும், தேர்தலில் இது வரை எந்தவிதமான உள்ளடி வேலைகளிலும் அவர் ஈடுபடவில்லை.

இந்நிலையில் தான் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான  ரகுநாதன் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அழகிரி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடும் ரகுநாதனுக்கு டி.வி,சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், திமுக சார்பில் அண்ணாதுரையும், அமமுக சார்பில் ஞானசேகரும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு மத்தியில் அழகிரி ஆதரவுடன் ராகுநாதன் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் திருவண்ணாமலை தொகுதி முழுவதும் கருணாநிதி, அழகிரி ஆகியோரின் படத்தைப் போட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் தனக்கு ஆதரவாக மு.க.அழகிரி விரைவில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் ரகுநாதன் தெரிவித்துள்ளார். அழகிரி ஆதரவாளர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியயுள்ளது. 

click me!