
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பழிவாங்கல் நடவடிக்கையை விட்டு இந்தியாவின் பொருளாதரத்தை கவனியுங்கள் என ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ப.சிதம்பத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, நாட்டின் பொருளாதார சூழல் குறித்தும், மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் ப.சிதம்பரம் அவ்வப்போது டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. நவாஸ் கனி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை பழிவாங்கும் செயல்பாடு. சிதம்பரம் மீது தொடர்ச்சியாக பழி வாங்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. ஆனால் அவற்றை முறியடித்து விரைவில் அவர் சட்டப்படி வெளியே வருவார். கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவகுமார், கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் மீது தொடரும் நடவடிக்கையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். காங்கிரஸ்காரர்களை குறிவைத்தே இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.
மத்திய அரசு அடுத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு ப.சிதம்பரத்திடம் பொருளாதார ஆலோசனைகளைக் கேட்கலாம். அதன்மூலம் பொருளாதார முன்னேற்ற வழியை மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்கி வேலைவாய்பைப் பெருக நடவடிக்கை எடுக்கலாம். இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.