பெரியார் பிறந்த தினம் சமூகநீதி நாளாக அறிவிப்பு. வரிந்துகட்டி வரவேற்ற பாஜக எம்எல்ஏ .. அவையில் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 6, 2021, 3:35 PM IST
Highlights

பலரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார், எழுதத் தயங்கியதை எழுதியவர் பெரியார், பெரியாரின் குருகுலத்தில் தான் திமுக உருவாக்கியது. நாடாளுமன்ற வாசலுக்குகூட செல்லாத பெரியாரால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. 

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 அன்று சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். இது அரசியல் தரப்பில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்பாக கருதப்படுகிறது. தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல திராவிட இயக்கத் தலைவர்களில் மிகப்பெரும் கனவு கோரிக்கைகளில் ஒன்றான  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி அர்ச்சகர் பயிற்சி முடித்து காத்திருப்போரை பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சமூக நீதிப் போராளி தலைவர் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் நீக்கப்பட்டது என பணி நியமன ஆணை விழாவில் முதலமைச்சர் பேசினார். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் அறிவித்த சமூகநீதி திட்டங்கள் ஒவ்வொன்றாக முதலமைச்சர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இந்த வரிசையில் இன்று சட்டப்பேரவை  கூட்டத்தில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர். பெரியாரின் செயல்பாடுகள் போராட்டங்கள் குறித்து பேச வேண்டும் என்றால் பத்து நாட்கள் அவையை ஒத்தி வைத்து விட்டு பேச வேண்டும், தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சமூகநீதி இன்று பரவியிருக்கிறது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். 

பலரும் பேச தயங்கியதை பேசியவர் பெரியார், எழுதத் தயங்கியதை எழுதியவர் பெரியார், பெரியாரின் குருகுலத்தில் தான் திமுக உருவாக்கியது. நாடாளுமன்ற வாசலுக்குகூட செல்லாத பெரியாரால் தான் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு பெரியார் போட்ட விதையே காரணம் என பேசினார். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரவேற்று பேசினர். அதேவேளையில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் பெரியார் பிறந்த நாளில் சமூகநீதி நாளாக கொண்டாடுவதை வரவேற்றனர். 

இது குறித்து பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்ப்பு தெரிவிக்கிறது என வரவேற்றுள்ளார். இது அரசியல் தளத்தில் பரலின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

click me!