தமிழக மக்களே உஷார், 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை..!! கடலுக்கு போகவேண்டாம் என எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 19, 2020, 12:58 PM IST
Highlights

வட கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிக வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பந்தலூர் (நீலகிரி) 5 சென்டி மீட்டர் மழையும், சின்னக்கல்லார் (கோவை) 4 சென்டிமீட்டர் மழையும், தேவலா (நீலகிரி) திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 3 சென்டி மீட்டர் மழையும், பேச்சிப்பாறை, கன்னியாகுமரி, அரக்கோணம், ராணிப்பேட்டை, பாபநாசம், தஞ்சாவூர் திருவாரூர் தலா ஒரு சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. வட கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் 20ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 21 வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 18 அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 19 தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 20 ஆம் தேதி தெற்கு வங்க கடல் மத்திய கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், செப்டம்பர் 21 தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வட கிழக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 22 வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா ஒடிசா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 19-9-2020 இரவு 11.30 மணி வரை கடல் உயரலை 3.5 முதல் 3.8 மீட்டர் வரை எழுப்பக் கூடும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

click me!