சென்னை மக்களே உஷார், இதற்காக பணத்தை இழந்து விடாதீர்கள்..!! முன்னெச்சரிக்கையாக இருங்கள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2020, 3:48 PM IST
Highlights

13-10-2020 அன்று ஒரு நாள் மட்டும் 2.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை வளசரவாக்கம் மண்டலத்தில் மொத்தம் ரூபாய் 18. 93 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் கடைகள் மற்றும் நபர்களிடமிருந்து ரூபாய் 2.75 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனை மற்றும்   உத்தரவுகளின் படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அவர்கள், தொழில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் அங்காடிகள் எங்க பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்கள். தளர்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத்  தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை அவ்வப்போது அரசு அறிவித்துள்ளது. 

தற்போது பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகள் மற்றும் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர். பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக் கவசம் அணிதல், 2 மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தி கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வாயிலில் கிருமி நாசினிகள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சியில் வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் முகக்கவசம் மற்றும்  சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த வணிக நிறுவனம் மற்றும் உணவகத்திற்கு மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் விதிக்கப்பட்டது. 

13-10-2020 அன்று ஒரு நாள் மட்டும் 2.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை வளசரவாக்கம் மண்டலத்தில் மொத்தம் ரூபாய் 18. 93 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள்  பின்பற்றப்படுகின்றனவா என  மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் கடைகள் உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13-10 -2020 அன்று ஒரு நாள் மட்டும் ரூபாய் 5.75 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை மொத்தம் ரூபாய் 2. 65 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.   
 

click me!