நிர்மலா தேவி பற்றி தகவல் தெரிந்தால் கூறுங்கள்...! பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம்!
மாணவிகளை துணை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்தது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் இன்று விசாரணை தொடங்கியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நிர்மலா தேவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார். மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் 21, 25, 26 ஆகிய 3 நாட்கள் தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். 3 நாட்களிலும் விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக தகவல் தரலாம் என்றும் விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை முதல் சந்தானம் குழு, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்தப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் விசாரிக்கப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நிர்மலா தேவி என்ன பயிற்சிக்காக எப்போது வந்திருந்தார் என்று துணைவேந்தர் செல்லத்துரையிடம் சந்தானம் விசாரணை நடத்தினார்.
கொடைக்கானல் அன்னை தெரசா கல்லூரி முதல்வரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது. அன்னை தெரசா கல்லூரி பட்டமளிப்பு விழா ஏன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்றும், அந்த நிகழ்ச்சியில் நிர்மலா தேவி பங்கேற்றாரா என்றும் சந்தானம் கேள்வி எழுப்பினார்.